வரலாறு: காலிஃபிளவர்

Share this :
No comments


பெயரைக் கேட்டாலே, 'இது நம்ம ஊர் சரக்கு இல்லை' என்பது தெரிந்துவிடும். ஆம், இதன் தாயகம் துருக்கி.

குருசிஃபேரஸ் ( cruciferous ) காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த காலிஃபிளவர், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே துருக்கி நாட்டு மக்களால் உணவாக உட்கொள்ளப்பட்டது என்று கி.மு 600-ல் வாழ்ந்த ரோம் நாட்டு தத்துவ மேதையும், கடற்படை தளபதியுமான பிலினி ( Plini ) தனது குறிப்புகளில் தெரிவித்துள்ளார். ஆனால், உலகத்தின் பிறபகுதிகளான இத்தாலி, ஸ்பெயின், எகிப்து, போர்ச்சுகல் போன்ற நாடுகளை வந்தடைந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான். காலிக்கட் (கோழிக்கோடு) துறைமுகத்துக்கு மரங்களை ஏற்றிவந்த போர்ச்சுகல் நாட்டு சரக்குக் கப்பல் மூலம் 15-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவுக்குள் கால் பதித்தாலும், 17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் காலிஃபிளவர் ஒரு விவசாய பயிராக இங்கே பரவியது.

எல்லா இடங்களிலும்., எல்லா காலங்களிலும் பயிர் செய்யப்பட்டாலும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை உள்ள சீதோஷ்ண நிலையே சிறந்ததாகும். அமெரிக்கர்களால் அதிகமாக உட்கொள்ளப்படும் காலிஃபிளவர் விவசாயத்தில் இன்று முதலிடம் வகிப்பது இத்தாலி, மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

உலகின் அனைத்துப் பகுதி மக்களின் உணவிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் காலிஃபிளவரை, பெரும்பாலும் வெள்ளை நிறத்தில்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், கண்ணை பறிக்கும் பல வண்ணங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட வகைகளில் அது பயிராகிறது.

காலிஃபிளவரின் மருத்துவ குணம் அபாரமானது என்கிறது அமெரிக்க கேன்சர் ஆராய்ச்சி மையம். அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ் ( Glucosinolates ) மற்றும் தையோசையனட்ஸ் ( Thiocyanates ) ஆகிய என்சைம்கள் ( Enzymes ), கேன்சர் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது என்று அந்த மையத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நெதர்லாந்து நாட்டு மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சியில் வாரத்துக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் தங்கள் உணவில் காலிஃபிளவரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கிறது.

காலிஃபிளவரின் சிறப்பான மருத்துவ குணங்களைப்பற்றி இப்படி கூறும் ஆய்வுகள், தவறாமல் அடிகோடிட்டு குறிப்பிடும் தகவல்... 'ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத காலிஃபிளவருக்கு மட்டுமே இந்த குணங்கள் உண்டு.’

ஆனால், காலிஃபிளவரில் இருக்கும் புழுக்களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று பெரிய பெரிய டிரம்களில் ரசாயன மருந்துகளை வைத்துக்கொண்டு, அதில் காலிஃபிளவர்களை ஊற வைத்தல்லவா சந்தைக்கு அனுப்புவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்!

No comments :

Post a Comment